உரையாடல் கவிதைப் போட்டி குறித்து

இன்று காலை 11.15 மணி வரையில் 121 கவிதைகள் போட்டிக்கு வந்திருக்கின்றன. கவிதைகளை அனுப்பியவர்களுக்கு நன்றி. கவிதைகளை அனுப்ப கடைசி தேதி ஜனவரி 14. எல்லாக் கவிதைகளையும் இந்த இணைப்பில் வாசிக்கலாம் :

http://tamil.blogkut.com/uraiyaadal.php

ஏற்கனவே நாங்கள் ஒருவர் ஒரு கவிதையை மட்டுமே அனுப்பும்படி கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட கவிதைகளை அனுப்பியிருக்கிறார்கள். இந்தத் தளத்தை நிர்வகிப்பவர்கள் சங்கமம் குழுவினர் என்பதால் எங்களால் அந்த அதிகப்படியான இடுகைகளை மேற்குறிப்பிட்ட தளத்திலிருந்து நீக்க இயலாது.

இதுவரை ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளைச் சமர்பித்தவர்களின் கவிதைகளில் எந்தக் கவிதை கடைசியாகச் சமர்பிக்கப்பட்டதோ அதைப் போட்டிக்கு எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்திருக்கிறோம். இனி, யாரும் ஒன்றுக்கு மேற்பட்ட கவிதை அனுப்ப வேண்டாமென கேட்டுக் கொள்கிறோம்.

முழுமையான விவரங்களுக்கு இந்த இடுகையைப் படிக்கவும் :

http://naayakan.blogspot.com/2009/11/blog-post_25.html

நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் / பைத்தியக்காரன்

சயின்ஸ் என்பதே ஃபிக்‌ஷன்... ஒரு பின்நவீனத்துவ கொத்துபரோட்டா

அறிவியல் என்பதே ஒரு கதையாடல்தான் என்ற அர்த்தத்திலேயே இந்தத் தலைப்பை வைத்திருக்கிறேன். இந்தப் பதிவுக்கும், இந்தத் தலைப்புக்கும் காரணம் நானல்ல. லையோடர்ட் (Lyotard ). பிரெஞ்சு தத்துவ அறிஞர். ஆரம்பத்திலேயே ஒரு விஷயத்தை சொல்லிவிடுகிறேன். லையோடர்டை இப்போதுதான் நான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். அதுவும் ஆங்கிலத்தில். கிழிஞ்சது கிருஷ்ணகிரி. சுட்டுப் போட்டாலும் ஆங்கில பரிட்சயம் சுமார்தான். ஐ.எஸ்.ஐ. முத்திரை குத்தப்பட்ட தத்தக்கா பித்தக்கா கேஸ். ஸீன் காட்டுவதற்காக அலுவலகத்தில் ஆங்கில புத்தகங்களை கொண்டுவந்து பெண்களை ஈர்க்கப் பார்ப்பதோடு சரி. யாரும் மயங்கவில்லை என்பது பின்நவீனத்துவ சூழல்! தலை தெறிந்தாலே தலை தெறிக்க ஓடுகிறார்கள். பயம். மறை கழன்ற கேஸ் அல்லவா! என்றபோதும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத பைத்தியக்காரனாக புத்தகங்களுடன் அலைகிறேன் :)

நிற்க. லியோடர்ட் குறித்து பார்ப்போம்.

தமிழ் வாசகர்களுக்கும் சரி, ஆங்கில வாசகர்களுக்கும் சரி, முக்கியமாக பின்நவீனத்துவம் குறித்த உரையாடலில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் அறிமுகமான ஒரு பெயர் லையோடர்ட் (Lyotard ). பின்நவீனத்துவர்கள் என்று சொல்லப்படும் ஃபூக்கோ, தெரிதா போன்றவர்கள் மனிதத்துக்கு எதிரான ஒரு பார்வையை கோட்பாட்டு ரீதியாக வைக்கும்போது, லையோடர்ட், தெல்யூஸ் - கத்தாரி போன்றவர்கள் மனித அழிவை எதிர்த்து பேச வேண்டும் என கருதியிருக்கிறார்கள். ஒருவகையில் இது கிழக்கத்திய பார்வை. தவிர பண்பாட்டுக்கும், அழகியலுக்கும் லையோடர்ட் விஞ்ஞான முக்கியத்துவம் தருவதை அவ்வளவு சீக்கிரத்தில் புறக்கணித்து விட முடியாது.

இந்த இடத்தில் கொஞ்சமே கொஞ்சமாக பின்நவீனத்துவம் குறித்து உரையாடிவிடுவோம். பின்நவீனத்துவ தத்துவம் என்று எதுவும் கிடையாது. பின்நவீனத்துவ இலக்கியம், பின்நவீனத்துவ இசை, பின்நவீனத்துவ சினிமா... என்ற ரீதியில் எந்தவிதமான முன் - பின் நவீனத்துவமும் கிடையாது. அப்படி கொத்து பரோட்டா போடுவதும் ஒருவகையில் பின்நவீனத்துவம்தான். பின்நவீனத்துவ வாசிப்பு, பின்நவீனத்துவ உரையாடல் என்பதாகத்தான் இருக்கிறது. மொத்தத்தில் பின்நவீனத்துவ சூழல் இப்போது நிலவி வருவதாக சொல்லலாம்.

அதாவது, ஆதெள பீர்த்தாம்பரத்திலே மார்க்ஸியம், பெண்ணியம், தலித்தியம், முதலாளித்துவம்... என்பதான ஒற்றைப் பார்வை இருந்தது. அந்த ஒற்றை பார்வையில் சின்சியராக பயணம் செய்ததில் மிஞ்சியது சூன்யமே. கையறு நிலையே. இதற்கு மேல் என்னதான் செய்வது என்ற பதற்றத்தின் வாசலே, பின்நவீனத்துவ வாசலுக்கான தொடக்கம். இந்த ஒற்றைப் பார்வையை பெருங்கதையாடலாக கொண்டால், லையோடர்ட் அதற்கு மாற்றாக சிறுகதையாடல்களை முன் வைக்கிறார்.

பெருங்கதையாடல்களிடம் எல்லாவற்றுக்கும் ஒரு இன்ஸ்டண்ட் பதில் இருக்கும். விடை இருக்கும்.
இதற்கு காரணம் பார்ப்பனீயம். அதற்கு காரணம் முதலாளித்துவம். தீர்வு? புரட்சி, மார்க்ஸியம், பெண்ணியம், சுதந்திரம்... இன்னபிற... இன்னபிற...

அப்படியில்லாமல் குறிப்பிட்ட சூழலுக்கு, குறிப்பிட்ட பதிலை தேடுவது அல்லது சொல்வது அல்லது கண்டறிவது அல்லது...

இது சிறுகதையாடல். தர்க்கம், விவாதம் மூலமாக 'ஜனநாயகப் பூர்வமாக' தீர்வை காண முயல்வது பெருங்கதையாடல். இதை விட்டு முற்றிலும் விலகாமல், பெருங்கதையாடல்களின் எல்லைகளையும், பயன்களையும் ஒப்புக் கொண்டு தர்க்கத்துக்கு அகப்படாத சிந்தனை முறைமைகளில் பழக்கப்படுவது, பயணம் செய்வது, சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுவது... என்ற ரீதியில் உருவாக்கப்படும் கதையாடல்களே சிறுகதையாடல்கள். இதற்கான பால பாடம் விவாதத்தை தூக்கி கடாசிவிட்டு உரையாடலை வளர்த்தெடுப்பது.

இதுதான்டா பின்நவீனத்துவம்... என ஒற்றை பார்வையை வைக்காமல், எனது (அரைகுறை) புரிதலுடன் லையோடர்ட் விஷயத்துக்கு வருகிறேன்.

லையோடர்ட் எழுதிய 'போஸ்ட் மார்டர்ன் கண்டிஷன்' (Post Modern Condition ) என்னும் நூல் உலகப் புகழ் பெற்றது. அனைத்து சிந்தனைகளிலும் ஒரு கதையாடல் தன்மை அடிப்படையாக இருப்பதை இந்த நூலில் சுட்டிக் காட்டுகிறார்.

இப்படி பார்ப்போம். ஒரு ஆதிவாசி கதை சொல்கிறார் என்றால், யாருக்கு சொல்வார்? தன் முன்னால் கதை கேட்க அமர்ந்திருப்பவர்களை சார்ந்துதானே தன் கடமையையும், உறவையும் நிர்ணயிக்கிறார்? அவர்கள் சொல்வதன் நியாயம் அந்தக் கதை சூழலை அல்லவா சார்ந்திருக்கிறது? அவ்வளவு ஏன்... அனைத்து வகையான எழுத்துக்களையுமே எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்திலும் ஒரு கதையாடல் தன்மை இருக்கிறது. உதாரணத்துக்கு இந்தப் பதிவு. லையோடர்ட் குறித்து எழுதியிருக்கிறேன். அதுவும் கதையாடல் தன்மையுடன். யாருக்காக? பதிவை படிக்க வருபவர்களுக்காக. இங்கு இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். சிறு பத்திரிகை சார்ந்த அல்லது தத்துவ ஈடுபாடு சார்ந்த மாணவர்களை முன்னிறுத்தி நான் இங்கு உரையாடவில்லை. பதிவுலகை சேர்ந்தவர்களை மனதில் நிறுத்தியே உரையாட ஆரம்பித்திருக்கிறேன். ஆக, பதிவின் கதையாடல் தன்மை பதிவுலகம் என்னும் சூழலை சார்ந்திருக்கிறது...

இந்த விஷயத்தைதான் லையோடர்ட் நவீன விஞ்ஞானத்துக்கும் பொருத்துகிறார். தனக்குள் ஒரு கதையாடல் தன்மையைக் கொண்டு தனக்கான நியாயத்தை விஞ்ஞானம் நிலைநாட்டுகிறது என்கிறார். ஆனால், பொத்தாம் பொதுவாக இப்படி சொல்லிவிட்டு லையோடர்ட் தனது மூக்குக் கண்ணாடியை கழற்றி வைக்காமல் அதை இன்னமும் நுணுக்கமாக ஆராய்கிறார். அதாவது விஞ்ஞானம் தனக்கான நியாயத்தை நிலைநாட்டப் பயன்படுத்தும் முறைகளையே தன் ஆய்வுக்குரிய முக்கிய பொருளாக எடுத்துக் கொள்கிறார். வெறும் விஞ்ஞானத்தை அல்ல. இந்த நுணுக்கம்தான் இவரது ஆய்வை சுவாரஸ்யமாக்குகிறது.

கதை சொல்பவர் என்ன செய்வார்? சில விதிகளை தனக்குள் ஏற்றுக் கொள்வார். அப்படி ஏற்றுக் கொண்ட விதிகளின் மூலமாக ஒரு சுய நியாயம் கதை சொல்பவர்களுக்கு கிடைக்கிறது. இந்த சுய நியாயத்துக்கு எதிராகத்தான் 18, 19ம் நூற்றாண்டு விஞ்ஞானம் நின்றது. அதாவது 'சிறுகதையாடல்' தன்மையிலிருந்து மாறுபட்டு பெருங்கதையாடலாக நின்றது. அத்துடன் விஞ்ஞான அறிவு தன் செயல்பாட்டுக்குள் கட்டுப்பட்டதல்ல.

விஞ்ஞானத்துக்கு வெளியில் விதிமுறைகள் உண்டு. அதன் தொடர்புறுத்தலும், குழுச் சம்பந்தமும் வேறுபட்டது.

இப்படி 'பெருங்கதையாடலிலிருந்து' வேறுபட்ட விஞ்ஞானம் இன்று 'சிறுகதையாடலை' நம்ப வேண்டிய நிலையில் இருக்கிறது என்கிறார் லையோடர்ட். அதாவது விஞ்ஞானம் மக்களிடம் நியாயப்படுத்தலை பெற்றது 'கதையாடல்' மூலமாகத்தான். 'மனித விடுதலை' என்ற பெருங்கதையாடலுடன் இணைந்துதான் விஞ்ஞானம் நிலைபெற்றது. இதன் மூலம் பிற சிறுகதையாடல்களை ஆணையிடும், ஒழுங்குப்படுத்தும், தனக்கு கீழ் கொண்டு வரும் நிலைக்கு வந்திருக்கிறது.

ஒரு எழவும் புரியவில்லையா? பரிசோதனை செய்யக் கூடிய முடிவைக் கண்டுப்பிடிப்பது என்ற எண்ணத்திலிருந்து இப்போது விஞ்ஞானம் மாறிவிட்டது. ஓராய்விலிருந்து, இன்னொரு ஆய்வு என்ற நிலையை மீண்டும் மீண்டும் அடைகிறது. உண்மையை கண்டுபிடிக்கும் நோக்கத்திலிருந்து திசைமாறி விஞ்ஞானம் ஒரு நிகழ்ச்சியியலாக மாறிவிட்டது என்கிறார் லையோடர்ட். 'இது உண்மையா?' என்பது மாறி, இப்போது 'இது எவ்வளவு மதிப்பு உடையது?' என்று மாறிவிட்டது...

மவனே... உன் அட்ரஸை கொடு... ஃபிளைட் பிடிச்சு வந்தாவது அடிக்கிறேன்... என நீங்கள் நினைப்பதற்கு முன், இந்தப் பதிவுக்கு தொடர்பில்லாத ஆனால், தொடர்புள்ள சில உரையாடல்கள்:

1. இன்று விஞ்ஞானி அல்லது கண்டுபிடிப்பாளர் என்பவர் ஒரு கருவியை கண்டுப்பிடிப்பதற்காக அல்லும் பகலும் உழைக்கிறார். பசியை மறக்கிறார்... தூக்கத்தை துறக்கிறார்... குடும்பத்தை விட்டு விலகுகிறார்... இவர்களுக்காக பிரபல பிசினஸ் நிறுவங்கள், கம்பெனிகள், பல்கலைக்கழகங்கள், அரசுகள் பண உதவி செய்கின்றன. குறிப்பிட்ட காலத்துக்குள் குறிப்பிட்ட விஷயத்தை கண்டறிய வேண்டும் அல்லது மாற்றி அமைக்க வேண்டும் அல்லது அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன். இந்த சூழலில் படி அளப்பவர்களின் நன்மைக்காக விஞ்ஞானிகள் உழைப்பார்களா அல்லது ஏழைக்காக உழைப்பார்களா?

2. கண்பார்வை என்பது சாதாரண கோளாறு. ஆனால், 500 ஆண்டுகளுக்கு முன் இது பார்வையின்மை வகையாகவே கருதப்பட்டிருக்க வேண்டும். கடவுளின் சாபம் என்றுக் கூட சொல்லப்பட்டிருக்கலாம். இத்தகைய மக்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டதே மூக்குக் கண்ணாடி. இதன் பொருள்... இன்று கண்ணாடி இயல், கண், உள் அமைப்பு பற்றிய அறிவு, கண்ணாடி வில்லைகளை அறுக்கும், பட்டைத்தீட்டும் தொழில் உற்பத்தி, தொழிற்சாலைகள்... என அனைத்தும் இந்த மூக்குக் கண்ணாடிக்குள் அடக்கம். கண் பார்வை கோளாறு உள்ள அனைவருக்கும் சட்டப்படி மூக்குக் கண்ணாடி அணிய இன்று சுதந்திரம் இருக்கிறது. ஆனால், பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளவர்களால் இந்த சட்டப்படியான சுதந்திரத்தை முன்னிறுத்தி சுலபத்தில் மூக்குக் கண்ணாடியை வாங்க முடியுமா?

3. அறிவு என்பது பழைய வடிவலில் இல்லை. அறிவு உலகை புரிந்து கொள்வதற்கான நிலையிலிருந்து மாறி ஒரு உற்பத்தி சக்தியாக மாறிவிட்டது. முதலளித்துவம் உழைப்பை நிலவுடமையிலிருந்து விடுவித்து சந்தையில் விற்கும் 'உற்பத்தி சக்தியாக' மாற்றியதைப்போல இன்றைய ஏகாதிபத்தியம் அறிவை 'உறபத்தி சக்தியாக' மாற்றியுள்ளது. இனியும் விஞ்ஞானம் அது சார்ந்த அறிவு எல்லாம் விற்பனை சரக்காக மாறி சந்தைக்கான பொருளாகிவிட்டது.

4. விஞ்ஞானம் பகுத்தறிவு இருக்கும்வரை மூடநம்பிக்கையும் அதை சார்ந்த பழங்கருத்துகளும் இருக்கும். இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். விஞ்ஞானம் தனது கதையாடலை நடத்த தன்னை உரசி ஒப்பிட்டுக்கொள்ள மூடநம்பிக்கையின் இருத்தலை வேண்டி நிற்கிறது.

5. மனித விடுதலை மனிதகுல உய்விப்பு முன்னேற்றம் போன்ற பெருங்கதையாடல் என்பது இனி சாத்தியமில்லை சிறுகதையாடல்களின் காலம் என்பதாக அறிவிக்கப்பட்ட இப்பின்நவீனத்துவ காலகட்டத்தில் பெருங்கதையாடல் முற்றிலும் மறைந்துவிட சாத்தியமில்லை அவை சமூக்தின் ஆழ்மனத்தில் நமது இருப்பின் ஒரு பகுதியாக இயக்கம் கொள்கிறது. மறைவாக உள்ள இந்த பெருங்கதையாடலை அரசியல் நனவிலி எனக் குறிப்பிடுகிறார் பிரடெரிக் ஜேம்சன்.

பின்குறிப்பு:

இது மீள்பிரசுரம் (ஜனவரி 31, 2008). 3, 4, 5 குறிப்புகள் அப்போது இடுகையில் பின்னூட்டமிட்ட நண்பர் ஜமாலன் எழுதியவை.

சிறுகதையாக ஆலிஸின் அற்புத உலகம்

லூயி கரோல் மன்னிப்பாராக. புகழ்பெற்ற 'ஆலிஸின் அற்புத உலகம்' நாவலை சிறுகதையாக சுருக்கியிருக்கிறேன். முக்கியமாக கடைசி மூன்று வரிகளை மாற்றியிருக்கிறேன். ஆங்கிலத்தில் இந்நாவலை படித்திருந்தாலும் இப்படி சிறுகதை எழுதிப் பார்க்கலாமா என்று முயன்றதற்கு காரணம், எஸ்.ராமகிருஷ்ணன். 'அன்னம்' வெளியீடாக வந்திருக்கும் 'ஆலிஸின் அற்புத உலகம்' தமிழாக்கத்தை படித்ததன் விளைவு இது. இதற்காக எஸ்.ரா.வுக்கு நன்றி. சிறுகதை வடிவில் இதை பகிர்ந்து கொண்டதில் நாவலில் உள்ள பல விஷயங்கள் விடுபட்டிருக்கின்றன. அனைத்து குறைகளுக்கும் முழுக்க முழுக்க நானே காரணம்.

ஆலிஸின் ரசிகர்கள் கோபத்துடன் என் சட்டையை அல்லது டிரவுசரை கிழிக்கும் கணங்களை எதிர்பார்த்து....

--------------

அது அலுப்பும் சோர்வும் தரும் கோடைக்காலம்.

இதுபோன்ற காலங்களில் செவ்வந்தி மலர்களைப் பறிப்பதுதான் ஆலிஸின் வழக்கம். அன்றும் அதேபோல செவ்வந்தி மலர்களைப் பறிப்பதற்காக ஆலிஸ் தோட்டத்துக்குச் சென்றாள்.

அப்போது வெள்ளை நிற முயல் ஒன்று தன் கோட் பாக்கெட்டில் இருந்த கடிகாரத்தை எடுத்துப் பார்த்துவிட்டு, ''ஓ டியர், நேரமாகிவிட்டதே...'' என்றபடி ஓடியது.

கடிகாரத்தை பார்க்கும் முயலைப்பற்றி இதற்கு முன்பு ஆலிஸ் கேள்விப்பட்டதும் இல்லை; பார்த்ததும் இல்லை. அந்த முயலைப் பிடித்து அதனுடன் பேச வேண்டும், பழக வேண்டும், விளையாட வேண்டுமென்று அவளுக்கு தோன்றியது. உடனே அம்பைப் போல் முயலை துரத்தியபடியே ஆலிஸ் ஓடினாள். ஆனால், அதை பிடிப்பதற்குள் ஒரு பெரிய பொந்தினுள் அந்த முயல் புகுந்துவிட்டது. முன் தீர்மானம் இல்லாமல் ஆலிஸும் அந்த பொந்தினுள் குதித்துவிட்டாள்.

அதன்பிறகுதான் அவளுக்கு விபரீதம் புரிந்தது. அவள் கீழே... கீழே விழுந்து கொண்டிருந்தாள். முடிவில் காய்ந்த சருகுகளின் மீது விழுந்தாள். அவளுக்கு, தான் பூமியின் மத்திய பாகத்தில் இருக்கிறோமோ என்று தோன்றியது. அப்போது தோட்டத்தில் கண்ட முயலை ஆலிஸ் மறுபடியும் பார்த்தாள். அந்த முயலால்தான் இப்படி நிகழ்ந்தது. இதற்கு மேலும் அதை பிடிக்காமல் விடக் கூடாது என்று நினைத்தபடி மறுபடியும் முயலை பின் தொடர ஆரம்பித்தவள், விளக்குகள் தொங்கும் அறை ஒன்றுக்கு தன்னால் வந்து சேர்ந்தாள்.

அந்த அறையில் நிறைய கதவுகள் இருந்தன. எந்தக் கதவின் வழியே முயல் சென்றிருக்கும் என்பதை அறிய ஒவ்வொன்றாக திறந்துப் பார்த்தாள். ஆனால், அனைத்துமே பூட்டப்பட்டிருந்தன. சட்டென ஆலிஸுக்கு பயம் வந்தது. எப்படி இங்கிருந்து வெளியேறுவது? ஆலிஸுக்கு ஒன்றும் புரியவில்லை. சுற்றிலும் பார்த்தாள். கண்ணாடி முக்காலியும், அதன் மீது தங்கச் சாவியும் அவள் பார்வையில் தென்பட்டது. ஆர்வத்துடன் அதை கையில் எடுத்தாள். கதவை திறக்கும்... வெளியேறி விடலாம். மலர்ச்சியுடன் முயற்சி செய்தாள்.

ஆனால், கண்களுக்கு தட்டுப்பட்ட எந்தக் கதவையும் அந்தச் சாவி திறக்கவில்லை. பதிலாக, திரைச்சீலைக்குப் பின்புறம் இருந்த சிறிய கதவைத் திறந்தது. ஆவலுடன் ஆலிஸ் எட்டிப் பார்த்தாள். அருவியுடன் அழகான தோட்டம் ஒன்று அவள் கண்களுக்கு முன்னால் விரிந்தது. அங்கு செல்வதென முடிவு செய்தாள். ஆனால், அங்கு செல்லவேண்டுமானால் அவள் உடல் தொலைநோக்கிக் கருவியை போல நீண்டதாக வளர வேண்டும். அப்போதுதான் அங்கு செல்ல முடியும். என்ன செய்வது? ஆலிஸ் அங்கும் இங்கும் ஓடினாள். 'என்னைக் குடிக்கவும்' என்ற லேபிள் ஒட்டப்பட்ட பாட்டிலைக் கண்டாள். அதில் விஷம் என்று எழுதியிருக்கவில்லை. எனவே சட்டென அதை எடுத்து குடித்தாள்.

என்ன ஆச்சர்யம், ஆலிஸின் உடல் நீளமாக வளரத் தொடங்கியது. தோட்டத்துக்கு இப்போது எளிதாக செல்லலாம். ஆலிஸ் உற்சாகத்துடன் ஓடினாள். ஆனால், அவள் முன்பு திறந்து பார்த்த கதவு, இப்போது பூட்டியிருந்தது. சாவியையும் காணவில்லை. அவளுக்கு அழுகையாக வந்தது. அழுவதால் என்ன பயன்? அடக்கிக் கொண்டாள்.

சுற்றும்முற்றும் அலைந்தபோது, ஓர் அட்டைப்பெட்டியும் அதில் ஒரு கேக் துண்டும் தட்டுப்பட்டது. அதுவரை இல்லாத பசி, கேக்கை பார்த்ததும் வந்தது. எடுத்து சாப்பிடத் தொடங்கினாள். கேக் வயிற்றினுள் செல்லச் செல்ல, அதிசயங்கள் நடக்க ஆரம்பித்தன. ஆமாம், சொல்லி வைத்தது போல ஆலிஸ் தன் பழைய உருவத்தை அடைய ஆரம்பித்தாள்.

சரி, எப்படி தப்பிச் செல்வது? அதுதான் ஆலிஸுக்கு பரீட்சைக்குப் படிப்பதை விட பெரிய சவாலாக இருந்தது. யோசித்தபடியே நடை பயின்றபோது எதேச்சையாக ஒரு கையுறை தட்டுப்பட்டது. அது முயலின் கையுறை. குதூகலத்துடன் அணிந்து பார்த்தாள். அவ்வளவுதான். அவள் உடல் சுருங்கத் தொடங்கி, கழுத்து தரையைத் தொடும் அளவுக்கு சின்னதாகிவிட்டாள். ஆலிஸால் இதை முன்பைப் போல் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். அவளது கண்ணீர் அந்த அறையை நிரப்பத் தொடங்கியது.

இதை துரதிருஷ்டம் என்றுத்தான் சொல்ல வேண்டும். தனது கண்ணீர் குளத்தில் தானே நீந்தும் துர்பாக்கியநிலைக்கு ஆலிஸ் தள்ளப்பட்டாள். வேறு வழியில்லை. தன்னை தேற்றிக் கொண்டு அதில் நீந்தத் தொடங்கினாள். தன்னைப் போலவே வேறு சிலரும் நீந்துவதை பார்த்தபோது, அந்தநிலையிலும் அவளுக்கு வியப்பு ஏற்பட்டது. அப்படி நீந்துபவர்கள் மனிதர்களல்ல. சுண்டெலிகளும், பறவைகளும். அவைகளுடன் உடனே ஆலிஸ் ஸ்நேகம் வைத்துக் கொண்டாள். நீந்தியபடியே அவைகளையும் அழைத்துக்கொண்டு கரையை அடைய முயற்சி செய்தாள். அந்த முயற்சியில் ஆலிஸுக்கு வெற்றியும் கிடைத்தது.

கரையை அடைந்த அவர்களுக்கு தங்கள் உடைகளை - உடல்களை எப்படி உலர்த்துவது என்பது பெரிய சிக்கலாக இருந்தது. ஒருவர் சொல்லும் யோசனை மற்றவர்களுக்கு பிடிக்காமல் போனது. விவாதம் நீண்டதுதான் மிச்சம். ஆனால், இந்த தொடர் விவாதமே அவர்களை நாற்காலி ஓட்டப்பந்தயம் விளையாடும்படி தூண்டியது. உற்சாகத்துடன் விளையாடும்போது ஏதேதோ பேசினார்கள். அப்போது தன் வீட்டில் தான் வளர்க்கும் டினா பூனை குறித்து, அதன் சேஷ்டைகள் குறித்து ஆலிஸ் பரவசத்துடன் பகிர்ந்து கொண்டாள். ஆனால், அதுவே அவளை சிக்கலில் மாட்டிவிட்டது. பூனை குறித்த பேச்சு எழுந்ததுமே சுண்டெலிகளும், பறவைகளும் பயந்துபோய் மாயமாக மறைந்துவிட்டன.

மீண்டும் தனித்துவிடப்பட்டாள் ஆலிஸ். சந்தோஷம் மறைந்து துக்கம் அவள் மீது கவிழ ஆரம்பித்தது. சரியாக அந்தநேரம் பார்த்து முதன்முதலில் அவள் பார்த்த முயல், அவளை நோக்கி வேகமாக வந்ததுடன், ''எனது கையுறையை விரைவாக கொண்டு வா...'' என கட்டளையும் இட்டது.

முயல் காட்டிய திசையில் ஓடிய ஆலிஸ், அழகான ஒரு வீட்டை அடைந்தாள். அந்த வீட்டினுள் எவ்வளவு தேடியும் முயலின் கையுறை கிடைக்கவேயில்லை. அப்படியும் விடாமல் முயற்சி செய்தாள். களைப்பு அவளை சூழ்ந்தது. தாகம் எடுத்தது. ஒரு சொட்டு நீராவது குடித்தால்தான் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியும் என்ற நிலை. கையுறையை மறந்துவிட்டு, தண்ணீரை தேடியபோது, 'என்னைக் குடிக்கவும்' என்று எழுதப்பட்ட பாட்டிலை கண்டாள். தனக்காகவே அது காத்திருப்பது போல் ஆலிஸுக்கு தோன்றியது. எடுத்து மடமடவென்று குடித்தாள்.

முந்தைய அனுபவம் போல தன் உடல் மாறுதலடையும் என்று ஆலிஸுக்கு தெரியும். ஆனாலும் இப்படி மாறுவோம் என்று அவள் நினைக்கவில்லை. ஆமாம், கூரையை முட்டும் அளவுக்கு இப்போது அவள் உயரமாகிவிட்டாள். எந்தப் பக்கம் திரும்பினாலும் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து பெரும் சத்தத்தை எழுப்பின.

இதனால் ஏதோ அபாயம் வந்துவிட்டது போல என்று நினைத்து, அதை எதிர்கொள்ளும் விதமாக பறவைகளும், சுண்டெலிகளும் ஓநாய்களும் அந்த வீட்டை குறிபார்த்து வேகமாக வந்தன. அனைவரையும் தன்னால் ஒரேநேரத்தில் எதிர்கொள்ள முடியாது. என்ன செய்வது என்று அச்சத்துடன் ஆலிஸ் நின்றபோது, முயல் ஒரு காரியம் செய்தது. கூடையில் இருந்த கேக் அனைத்தையும் அந்த அறையில் கொட்டியது. ஆலிஸ் அதை எடுத்து சாப்பிட்டால் ஏதேனும் மாற்றம் தெரியும் என்று நினைத்து சாப்பிட ஆரம்பித்தாள். அவள் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. அவள் உடல் சுருங்கத் தொடங்கி சிறிய பொடி உருவமாக மாறியது. அதேநேரம் ஓநாயும் நெருங்கிவிட்டது. இங்கேயே நின்றால், ஓநாய் தன்னை விழுங்கிவிடும் என்ற பயத்தில், ஆலிஸ் அந்த வீட்டைவிட்டு ஓடத் தொடங்கினாள்.

அப்போது அவள் ஒரு காளானின் உருவமே இருந்தாள். நினைத்தபோதெல்லாம் தன் உடல் இப்படி வளர்வதும், சுருங்குவதுமாக இருக்கிறதே... இதைக் குறித்து ஒரு புத்தகம் எழுதினால் என்ன? எழுத வேண்டியதுதான். ஆனால், இப்போதல்ல. வளர்ந்த பிறகு...

இப்படி நினைத்தபடியே அவள் ஓடியபோது, சில காளான் துண்டுகள் அவள் கைக்கு கிடைத்தன. அவற்றில் ஒன்றை தன் வாயில் போட்டு கொண்டாள். அவள் உடல் கொஞ்சம் வளர்ந்தது. இப்போது ஓடுவதை நிறுத்திவிட்டு நடக்கத் தொடங்கினாள்.

அவளது நடை அவளை ஒரு வீட்டின் முன்னால் நிறுத்தியது. அந்த வீட்டில் ஒரு சீமாட்டி வசித்து வந்தாள். அந்த சீமாட்டியின் குழந்தை பன்றி போலவே இருந்தது. ஆலிஸ் அங்கு சென்றநேரம், அந்த சீமாட்டி வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தாள். ராணியுடன் சூதாட அந்த சீமாட்டிக்கு அழைப்பு வந்திருந்தது.

''நீயும் அங்கு செல்கிறாயா?''

யாரோ தன் செவியில் கிசுகிசுத்ததும் ஆலிஸ் பயந்துவிட்டாள். திரும்பிப் பார்த்தால், முயல்! ஆலிஸ் தன்னையும் அறியாமல் தலையசைத்தாள். ராண்யின் இருப்பிடத்தை முயல் தன் கைகள் மூலம் காண்பித்தது. ஆலிஸ் அந்தத் திசையில் நடக்கத் தொடங்கினாள். ஆனால், அங்கு சென்றதும்தான், தான், முயல் சொன்ன திசைக்கு எதிர்திசையில் வந்திருக்கிறோம் என்பதே ஆலிஸுக்கு புரிந்தது.

ஆலிஸ் சென்ற இடத்தில் தேனீர் விருந்து நடந்துக் கொண்டிருந்தது. முயல், சுண்டெலியுடன் ஒரு குல்லாய்காரனும் அங்கு இருந்தான். ஆலிஸ் அவர்களுடன் தேனீர் விருந்தில் கலந்து கொண்டாள். விருந்து அவளுக்கு பிடிக்கவில்லை. எனவே பாதியில் எழுந்து தென்பட்ட சோலைப்பாதை வழியே நடக்கத் தொடங்கினாள்.

அங்கிருந்த ஒரு மரத்தில் கதவு இருந்தது. ஆவல் மேலிட அந்தக் கதவைத் திறந்தாள். கூடம் தென்பட்டது. நுழைந்தாள். சின்ன கண்ணாடி மேசயின் மீதிருந்த தங்கச் சாவி அவள் கண்களில் தட்டுப்பட்டது. சாவியை எடுத்து, முன்னால் இருந்த கதவைத் திறந்தாள். அழகான பூந்தோட்டம் அவளை வா... வா... என வரவேற்றது.

பரவசத்துடன் தோட்டத்துக்கு சென்றாள். சத்தம் கேட்டது. அந்தத் திசையில் பார்த்தாள். சீட்டுக் கட்டின் எண்களைப் போல தென்பட்ட காவலாளிகள் புடை சூழ, ராஜாவும் ராணியும் தோட்டத்துக்கு வந்துக் கொண்டிருந்தார்கள். மலர்ப் பந்தாட்டப் போட்டி நடைபெறப் போகிறது என்பதை ஆலிஸ் புரிந்து கொண்டாள்.

ஆலிஸை பார்த்த ராணி, அவளையும் விளையாட்டில் சேர்த்து கொண்டாள். ஆனால், விளையாட்டு ஆலிஸுக்கு பிடிக்கவில்லை. காரணம் ராணியின் நடவடிக்கை. எதற்கெடுத்தாலும் 'தலையை வெட்டு' என ராணி கட்டளையிட்டுக் கொண்டேயிருந்தாள்.

எப்படியோ விளையாட்டு முடிந்ததும் விசாரணை மண்டபத்துக்கு அனைவரும் சென்றார்கள். ராணியின் பழச்சாறை யாரோ பருகிவிட்டார்களாம். அதைப் பருகியது யாரென்று விசாரணை நடக்கத் தொடங்கியது.

அதைப் பார்த்தபடியே தன் கையில் எஞ்சியிருந்த காளான் துண்டுகளை ஆலிஸ் சாப்பிட்டு தன் பழைய உருவத்தை அடைந்தாள். நீண்டுக் கொண்டே சென்ற விசாரணையின் போக்கு ஆலிஸுக்கு பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவளும் சாட்சி சொல்ல அழைக்கப்பட்டாள்.

விசாரணைக் கூண்டில் ஆலிஸ் ஏறியதும் சீட்டு கட்டு கோபுரம் உதிர்வது போல் காவலாளிகளும் ராஜா, ராணியும் உதிரத் தொடங்கினர்...

------------

''ஆலிஸ், ஆலிஸ் எழுந்திரு. எத்தனை நேரமாக உன்னை எழுப்புவது?'' தங்கை தன்னை உலுக்கியதும் ஆலிஸ் கண் விழித்தாள். இவ்வளவுநேரம் தான் கண்டது கனவா?

ஆலிஸ் தன் தங்கையைப் பார்த்தாள். தங்கையின் கையில் ஒரு குட்டி முயலும், சில காளான்களும் இருந்தன. முயல் தன் கழுத்தில் அணிந்திருந்த கடிகாரத்தை பார்த்து, ''ஓ டியர் நேரமாகிவிட்டதே...'' என்றது.